SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

பிரண்டை எள் சட்னி

தேவையான பொருட்கள்

  • சுத்தம் செய்த பிரண்டை - 1 கப்
  • மிளகாய் வற்றல் - 5
  • உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
  • கருப்பு எள் - 1 ஸ்பூன்
  • பெருங்காயம் - 1 ஸ்பூன்
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வற்றல் மிளகாய், எள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்திருக்கும் பிரண்டையை அதன் பச்சை நிறம் மாறும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.

நன்கு வதங்கிய பிரண்டை, வறுத்த எல்லா பொருட்களும் ஆறியதும் அதனுடன் உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

இந்த சத்தான பிரண்டை சட்னியை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

மருத்துவ குணங்கள்

பிரண்டையை அரைத்து அடிப்பட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குறையும். உடைந்த எலும்புகள் இணைந்து எலும்புகள் பலம் பெறும்.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியின் போது ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு பிரண்டை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை உடையது.


சத்துமாவுக் கஞ்சி

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 1/4 கி
  • சம்பாகோதுமை - 1/4 கி
  • கேழ்வரகு - 1/4 கி
  • சோளம் - 100 கி
  • பார்லி - 50 கி
  • கம்பு - 50 கி
  • பொட்டுக்கடலை - 200 கி
  • சுக்கு - 3 துண்டு
  • ஏலக்காய் - 5
  • முந்திரி - 200 கி
  • பாதாம் - 200 கி

செய்முறை

இதில் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி போன்றவற்றையும், மீதமுள்ள பொருட்களை சுத்தம் செய்து காய வைத்து மிஷினில் அரைத்து கொண்டு, பிறகு வயதிற்கு தகுந்தார் போன்று தேவையான அளவு எடுத்து கஞ்சியாக காய்ச்சி, பால் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

இந்த கஞ்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும், வலுவையும் கொடுக்கும்.


கேழ்வரகு வெங்காய பக்கோடா

தேவையான பொருட்கள்

  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1/2 தேக்கரண்டி
  • புதினா இலைகள் - 10
  • நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெருஞ்சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  • வேர்க்கடலை - 1 மேஜைக் கரண்டி
  • முந்திரி - 10
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இடவும். போதுமான நீரை அவ்வப்போது தெளித்து உதிர் பதத்தில் பிசையவும்.

வாணலியில் எண்ணெய் காய வைத்து பக்கோடாக்களாக உதிர்த்துப் போடவும். சிவக்க வெந்ததும் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.


கேழ்வரகு இனிப்பு ரொட்டி

தேவையான பொருட்கள்

  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  • வெல்லத் துருவல் - 3/4 கப்
  • முந்திரி - 5
  • உப்பு - 1 சிட்டிகை
  • ஏலப்பொடி - 2 சிட்டிகை
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத் துருவலை எடுத்து ஒரு கரண்டி நீர் சேர்த்து இளம் தணலில் கரைய விடவும்.

கரைந்த வெல்லத்தை கல் மண் இல்லாமல் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும்.

கொத்து வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக மாவை சேர்த்து கிளறவும்.

தேங்காய் துருவல், ஏலப்பொடி, உப்பு , முந்திரி ஆகியவைகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மாவு, ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாகத் தட்டவும்.

தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த தட்டி வைத்த இனிப்பு ரொட்டியைப் போட்டு சிவக்க சுட்டு எடுக்கவும்.


கேழ்வரகு காரத் தோசை

தேவையான பொருட்கள்

  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • வறுத்து பொடித்த உளுத்தம் மாவு - 1 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
  • துருவிய இஞ்சி - 1/2 தேக்கரண்டி
  • கட்டித் தயிர் - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லிக்கீரை - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.

பிறகு தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவு இட்டு கனமான தோசைகளாக மொறமொறப்பாக சுட்டு எடுக்கவும்.


வாழைத்தண்டு சாலட்

தேவையான பொருட்கள்

  • பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்
  • நறுக்கிய வெள்ளரிக்காய், குடமிளகாய் - தலா 1/4 கப்
  • எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
  • வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒரு முறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


துளசி ரசம்

தேவையான பொருட்கள்

  • துளசி அரைத்த விழுது - 1 தேக்கரண்டி
  • தக்காளி சாறு - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • புளிக் கரைசல் - 1/4 கப்
  • வெல்லம் - கோலி அளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • அரைத்து பொடிக்க
  • மிளகு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • இடித்த பூண்டு - 1 தேக்கரண்டி
  • தாளிசம் செய்ய
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 2
  • உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

பாத்திரத்தில் தக்காளி சாறு மற்றும் பாதி அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து வரும் போது புளிக் கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.

நுரைத்து வரும் போது இடித்த துளசி இலைகள் அரைத்த பொடி வெல்லம் மற்றும் போதுமான நீர் சேர்த்து உப்பு சரி பார்த்து ஒரு கொதி வர கொதிக்க விடவும்.

தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து ரசத்தில் கொட்டி மூடி விடவும்.


அரிசி உப்புமா

தேவையான பொருட்கள்

  • பச்சரி பாதி புழுங்கல் அரிசி பாதிகலந்து கழுவி, வெயிலில் நன்றாக உலர்த்திப் பொடித்த ரவை – 1 உழக்கு
  • உடைத்த மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்
  • உடைத்த துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - 2
  • கடுகு - ½ டீஸ்பூன்
  • உடைத்த உளுந்து - 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 1
  • கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய். கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி, அரிசி ரவையைச் சேர்த்துக் கிளறவும். ஒரு பங்கு ரவைக்கு 2 பங்கு அளவு தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு போட்டு, குக்கரில் 3 விசில் வந்ததும், இறக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து, கிளறி பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு தேங்காய்த்துருவலும் சேர்க்கலாம்.


பூண்டுக் குழம்பு

தேவையான பொருட்கள்

  • தக்காளி – 1
  • சின்ன வெங்காயம் - 20
  • பூண்டு - 20
  • குழம்புமிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
  • கடுகு - 2 டீஸ்பூன்
  • வெந்தயம் - ½ ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • கறிவேப்பிலை - தேவைக்கு
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு
  • புளி - எலுமிச்சை அளவு

செய்முறை

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு , வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, உரித்த சின்னவெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் பூண்டு, தக்காளி, சேர்த்து வதக்கி, குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து புளிக்கரைசலில் உப்பு போட்டு கலந்து ஊற்றவும். குழம்பு நன்றாகக் கொதித்து வற்றி, எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி, சிறிதளவு வெல்லம் சேர்த்து பரிமாறவும்.


Dr. L. Mahadevan's Speech about Ayurveda