SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

காய்கறி எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்

  • • பச்சரிசி - 2 கப்
  • • எலுமிச்சம்பழம் - 2
  • • கேரட் - 1
  • • பீன்ஸ் - 10
  • • காலிஃப்ளவர் - 1
  • • பட்டாணி - 1/2 கப்
  • • இஞ்சி - 1 துண்டு
  • • பச்சைமிளகாய் - 3
  • • மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
  • • பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
  • • கறிவேப்பிலை - சிறிதளவு
  • • கடுகு - அரை டீஸ்பூன்
  • • உளுந்து - 1 டீஸ்பூன்
  • • கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
  • • முந்திரி - 10
  • • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • • உப்பு - தேவைக்கு

செய்முறை

அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம்பழம் பழச்சாறு சேர்த்து இறக்குங்கள். இந்த கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.


கூட்டாஞ்சோறு

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி - 2 கப்
  • துவரம்பருப்பு - 1/2 கப்
  • வாழைக்காய் - பாதியளவு
  • முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1
  • முருங்கைக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை - தலா 2 கைப்பிடி
  • சின்னவெங்காயம், மிளகாய்வற்றல் - தலா 8
  • பூண்டு - 6 பல்
  • கடுகு, உளுந்து, சீரகம் - தலா 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • வடகம் - 3 துண்டு
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளிக்கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து வடகத்தைப் பொரித்தெடுங்கள். இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.


கொத்தமல்லி சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிராகவடித்த சாதம்- 2 கப்
  • கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • நெய் - 2 டீஸ்பூன்
  • மல்லித்தழை - 2 கட்டு
  • மிளகாய் வற்றல் - 10
  • உளுந்து -1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறு துண்டு
  • புளி - சிறு எலுமிச்சை அளவு
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மல்லித்தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய்வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித்தழையை வதக்குங்கள். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள். சாதத்தில் அரைத்த விழுது, தாளித்தக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.


நெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 2 கப்
  • அரை நெல்லிக்காய் - அரை கப்
  • பச்சைமிளகாய் - 10
  • தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1 டீஸ்பூன்
  • கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.


சீரக சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிராக வடித்த சாதம் - 2 கப்
  • முந்திரி - 10
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள். சாதத்தில் சீரகக் கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் தயார்.


ஆந்திரா புளியோதரை

தேவையான பொருட்கள்

  • உதிராக வடித்த சாதம் - 2 கப்
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • பச்சைமிளகாய் - 3
  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • வெல்லத்துருவல் - 2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 1/2 ஸ்பூன்
  • உளுந்து, கடலைப்பருப்பு - தலா 2 ஸ்பூன்

செய்முறை

சாதம் சூடாக இருக்கும் போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள். மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள். சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.


பிஸிபேளா பாத்

தேவையான பொருட்கள்

  • அரிசி, துவரம் பருப்பு - தலா 1 கப்
  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 4
  • பச்சைபட்டாணி - அரை கப்
  • வேகவைத்து வழித்து எடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது – அரை கப்
  • புளி - எலுமிச்சை அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • தனியா - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்வற்றல் - 8
  • கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - அரை டீஸ்பூன்
  • பட்டை, லவங்கம் - தலா 1
  • ஏலக்காய் - 1
  • கசகசா - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள், அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தக்காளி , பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.


மாங்காய் இஞ்சி சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிராக வடித்த சாதம் - 2 கப்
  • தோல் நீக்கி துருவிய மாங்காய், இஞ்சி துருவல் – அரை கப்
  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 4
  • எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு

பொடிக்க

  • உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
  • தனியா - 2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் - 3
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள். சாதத்தில் அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.


கதம்ப சாதம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி, துவரம்பருப்பு - தலா 1 கப்
  • காய்கறி கலவை (கேரட்,பீன்ஸ், கோஸ், பீட்ரூட்) – 2 கப்
  • சின்ன வெங்காயம் - 10
  • தக்காளி - 5
  • சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  • புளிக் கரைசல் - அரை கப்
  • பெருங்காயம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்
  • கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
  • எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார் தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.


கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிராக வடித்த சாதம் - 2 கப்
  • கடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
  • எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

பொடிக்க

  • மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • முந்திரி – 4
  • கறிவேப்பிலை – 1 கப்
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 6

செய்முறை

கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு, மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பொடித்து வையுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யை காய வைத்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில் பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.


சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • பாசிப்பருப்பு – 1/4 கப்
  • முந்திரிபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பாகு வெல்லம் – 1 ½ கப்
  • நெய் – தேவைக்கு
  • உலர்திராட்சை – 1 ஸ்பூன்
  • ஏலக்காய் – 2 (தட்டிக் கொள்ளவும்)
  • பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை

அரிசி, பருப்பை அலசி நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து குழைய குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்ல கரைசலை ஊற்றவும். (தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டினதை) நன்கு கொதித்து பாகு பதம் வந்ததும், குழைய வெந்த, சாதம், பருப்பை சேர்த்து நெய் சேர்த்து கிளறி ஏலக்காய், பச்சை கற்பூரம், ஜாதிக்காய் பொடி சேர்த்து தேங்காய் துருவல் தூவி இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை போட்டு கிளறி பரிமாறவும்.


ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • வெண்ணெய் - 50 கிராம்
  • உப்பு - தேவைக்கு
  • மல்லித்தழை - சிறிதளவு
  • கெட்டித்தயிர் – 1 கப் (புளிப்பு இல்லாதது)
  • பால் - 1 கப் (காய்ச்சி ஆறியது)
  • நெய்யில் வறுத்த முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
  • உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

  • கடுகு - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவைக்கு
  • உடைத்த உளுந்து - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
  • காய்ந்த மிளகாய் - 1

செய்முறை

அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து குழைய வடித்து எடுத்துக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் சாதத்தை கொட்டி மத்தால் மசித்துக் கொள்ளவும். இதில் தயிர், பால், உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தளர்த்தியாக கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிர் சாதத்தில் கொட்டி கிளறி, மல்லித்தழை, முந்திரி தூவி பரிமாறவும்.


கேப்பை கூழ்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி நொய் - ½ கப்
  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • கெட்டி தயிர் – 2 கப்
  • சின்ன வெங்காயம் - ½ கப்
  • உப்பு - தேவைக்கு
  • பச்சை மிளகாய் - 1

செய்முறை

கேழ்வரகு மாவில் நீர் ஊற்றி கரைத்து 4-5 மணி நேரங்கள் வைக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் தேவையான நீர் விட்டு நொய் அரிசியை போட்டு கிளறி வேக விடவும். வெந்து கொண்டிருக்கும் போது, ஊறிய கேழ்வரகு மாவை கரைத்து அதில் ஊற்றி கைவிடாமல், அடிபிடிக்காமல் கிளறவும். அரிசியும், கேழ்வரகும் நன்கு வேக வேண்டும். வெந்ததும் அடுப்பை நிறுத்தி மூடி விடவும். மறுநாள் காலை கேப்பங்கூழை எடுத்து சிறிது தண்ணீர் , தயிர், உப்பு போட்டு கரைத்து சின்ன வெங்காயம் தூவி பச்சை மிளகாய் கீறிப் போட்டு பரிமாறவும் மோர் மிளகாய் கூட வேண்டுமெனில் கூட வைத்து பரிமாறலாம்.


நீர்மோர்

தேவையான பொருட்கள்

  • புளிக்காத கெட்டி தயிர் – 1 கப்
  • இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உடைத்த உளுந்து -1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை

புளிக்காத கெட்டித்தயிரை தேவையான நீர்விட்டு, உப்பு சேர்த்து மத்தால் கடைந்து கொள்ளவும். இஞ்சித் துருவல் போட்டு தாளிக்கும் பொருட்களை கலக்கி பருகவும்.


Our Vision

Our vision is to rejuvenate and revitalize lives through the profound wisdom of Ayurveda. We aspire to be a beacon of health and happiness, empowering individuals to embrace their well-being and lead a balanced life.

Testimonials

Discover the success stories of our satisfied patients. Read testimonials from individuals who have experienced remarkable improvements in their health and quality of life through our Ayurvedic treatments.

Contact Us

Are you ready to embark on a transformative journey towards health and well-being? Get in touch with our team today to schedule a consultation or to learn more about our services.

Location: Balamore Road, Derisanamcope, Azhagiapandiapuram Post, Kanyakumari Dist – 629851, Tamilnadu, India

Phone: 04652 – 282239 / 282449 / 9751691516

Email: mahadaevan101@gmail.com

Website: www.saradaayurveda.in

Follow Us on Social Media

Stay connected and receive regular updates, health tips, and more by following us on social media.

At Sri Sarada Ayurvedic Hospital, we open the doors to ancient healing practices and guide you towards a healthier, more balanced life.

www.facebook.com/mahadevan.lakshmanasarma

www.facebook.com/vaidyanadham2014